Friday, February 14, 2014

எனக்குப் பிடித்த நகுலன் கவிதைகள்


அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
"நண்பா அவள்
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
------------------------------------------------------------------------------------

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
--------------------------------------------------------------------------------------
எனக்கு
யாருமில்லை
நான்
கூட..
---------------------------------------------------------------------------------------
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
-----------------------------------------------------------------------------------------
சிலை முன்
பல பேசி
என்ன பயன்?
வலைவீசி
விலை பேசி
பல பேசும்
சிறு மானுடன்
சிலை முன்
பல பேசி
என்ன பயன்?
-----------------------------------------------------------------------------------------
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.