Sunday, May 22, 2011

Love Stands Alone-காதல் தனித்து நிற்கிறது’-COMMENTARY BY WRITER MUTHULINGAM

Love Stands Alone-காதல் தனித்து நிற்கிறது’ (Love Stands Alone) -Translation of Sangam Poems
Penguin Publication (Translated by L.Thangappa)



COMMENTARY BY WRITER MUTHULINGAM

முதலில் ஆச்சரியப்படுத்திய விசயம் நூலின் தலைப்பு: Love Stands Alone. இது குறுந்தொகையில் வரும் பாடலின் ஒரு வரி. தமிழில் இந்தக் குறுந்தொகை கவிதையை பலமுறை தாண்டிப் போயிருக்கிறேன். ஆனாலும் ஆங்கிலத் தலைப்பில் கிடைத்த அர்த்தம் எனக்கு கிடைக்கவே இல்லை.ஆங்கிலத்தில் கவிதையை படித்தபோதோ அந்தக் கருத்து பட்டென எழுந்து நின்றது.

குறுந்தொகை 174 பாடியவர் வெண்பூதி

தலைவி தோழிக்கு சொன்னது

பெயல்மழை துறந்த புலம்புஉறு கடத்தக்

கலை முட்கள்ளிக் காய்விடு கடுநொடி

துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்

அத்தம் அரிய என்னார் நத்துறந்து

பொருள்வயிற் பிரிவார் ஆயின்இவ் உலகத்துப்பொருளே மன்றப் பொருளே

அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

இதன் பொருளை சுருக்கமாக இப்படிக் கூறலாம். ‘மழை பெய்யாத பாலை நிலத்தில் கிளைவிடும் கள்ளிச் செடியின் காய்கள் வெடிக்கும் சத்தம் மென்மையான சிறகுகள் கொண்ட ஆண், பெண் புறாக்கள் சேருவதற்கு தடையாக அச்சமூட்டுகின்றன. என்னை தவிக்க விட்டுவிட்டு அப்படியான காட்டுப் பாதையில் அவன் பொருள் தேடி புறப்பட்டு போய்விட்டான். இந்த உலகத்தில் பொருள் ஒன்றே உறுதியான பொருள்.அருள் என்பது தன்னை ஏற்றுக் கொள்வதற்கு ஆரும் இல்லாமல் நிற்கிறது.’

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி வருகிறது.

In the desolate, rainforsaken land

the twisted kalli’s pods

open with a crackle

frightening the mating pigeons

with their closeknit downy feathers.

He has left me languishing.

‘In search of wealth’ he said.

He did not mind the risk on the way.

If it comes to that,

then in this world

wealth has all support and love must stand alone.

அந்தக் கடைசி வரியில் ஒரு சிறு மாற்றம்,அது கவிதையை என்ன மாதிரி உயர்த்தி விடுகிறது.காதலுக்கு ஒருவிதத்திலும் துணை கிடையாது என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில் ‘காதல் தனித்து நிற்கிறது’ (Love Stands Alone) என்று வரும். இதிலே மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்கப் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நவீன கவிதைபோலவே தோற்றமளிக்கிறது என்பதுதான்.

இன்னொரு பாடல். புறநானூறு 112. பாடியவர் பாரி மகளிர். நூறு கட்டுரைகளிலும்,இருநூறு மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல். சினிமாவும் இந்தப் பாடலை விடவில்லை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும்

இலமே! பொருள் மிக எளிது. ‘அன்றைய திங்கள் தந்தை இருந்தார், குன்றும் இருந்தது. இன்றைய திங்களில் வெற்றிகொண்ட அரசர் குன்றை கைப்பற்றிக்கொண்டனர். தந்தையும் இல்லை.’ இதை மொழி பெயர்ப்பதும் எளிது. வெண்நிலவு என்பதை full moon என்று மொழிபெயர்ப்பதே வழக்கம். ஆனால் அந்த வரி இப்படி வருகிறது.

But tonight the moon is full again,

the triumphant kings marching with their battle drums have our hill, and we are fatherless. Full moon என்பதற்குப் பதிலாக the moon is full again என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.சந்திரன் மறுபடியும் நிறைந்து விட்டான்.தேய்ந்த சந்திரன் மீண்டும் வளர்ந்து ஒருமாத காலம் ஓடிவிட்டது சொல்லப்படுகிறது.ஒரு சிறிய சொல் வித்தை கவித்துவ அழகை உயர்த்திவிடுகிறது.

இப்படி ஒரு மாயத் தருணம் ஹோமருடைய இலியட்டிலும் வருகிறது. அச்சில் கிரேக்க வீரன்.அவன் திரோஜனான ஹெக்டரை பழிவாங்கும் வெறியிலிருக்கிறான்.அச்சில் துரத்த ஹெக்டர் திரோய் நகரத்து சுவர்களை மூன்றுதரம் சுற்றிச்சுற்றி ஓடுகிறான்.அச்சில் ஹெக்டரை வெட்டி வீழ்த்தி அவனுடைய குதிக்காலில் கயிற்றைக் கட்டி தேரிலே இழுத்துச் செல்கிறான். பன்னிரண்டு நாட்களின் பின்னர் கோபம் அடங்கி பிணத்தை ஹெக்டரின் மனைவியிடம் ஒப்படைத்ததும் அவர்கள் மரணச் சடங்குகளைச் செய்துமுடிக்கிறார்கள். So they tended the burial of Hector, tamer of horses என்று ஹோமர் முடிக்கிறார். குதிரைகளை பழக்கும் ஹெக்டர் கொல்லப்பட்ட பிறகும் குதிரைகளால் இழுக்கப்பட்டு கேவலமான முடிவை அடைகிறான்.‘குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஹெக்டர்’ என்று கவி சொல்லவில்லை. ‘ஹெக்டர் ஆகிய குதிரைப் பயிற்சிக்காரன்’ என்று சொல்கிறார். மிகச் சாதாரணக் கவிதையாக அதுவரைக்கும் இருந்தது சட்டென்று திறந்து உயிர் கொள்கிறது.

இப்படி உயிர் பெறும் கவிதைகளை இந்த மொழிபெயர்ப்பில் பல இடங்களில் காணலாம். இன்னொரு கவிதை. புறநானூறு 196. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனை நோக்கிப் பாடியது.நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. ‘தருகிறேன்’ என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார். இது நீண்ட பாடல்.இதன் பொருள் சுருக்கம் இது.‘தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம்.தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல.உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தைத் தவிர வேறு எதையும் அணியாமல்,வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க’ என்கிறார் புலவர். ஆங்கில மொழிபெயர்ப்பில் கடைசிப் பகுதியில் ஒரு சின்ன மாற்றம் நிகழ்கிறது.

While I go away from here

braving the sun and the cold winds,

thinking of my delicate young wife

whose virtue is her loyalty

and who lives in my home

which is but a wind shelter

where my poverty

as if made of stone

sitting tight.

அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் தமிழ்க் கவிதையில் மையமாகத் தெரிகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில், வறுமையின் உக்கிரம்தான் முதலிடம் பெறுகிறது.என் குடிசையில் வறுமையோ கல்போலக் கரையாமல் நிற்கிறது என்று ஆங்கிலக் கவிதை முடிகிறது. நுட்பமான ஒரு பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது. குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு பாடல்களை நான் அவ்வப்போது படிப்பதுண்டு. எத்தனைதரம் படித்தாலும் அவை அலுப்பதில்லை.எந்த ஒரு நல்ல கவிதையும் வாசகரின் பொறிபட்டுத்தான் சுடர்விடும். இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது.ஒரு மொழிபெயர்ப்பு மூலப்பிரதியைத் தாண்டி மேலே போகலாமா? போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள். உலக இலக்கியங்களை தொடர்ந்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் David Damrosch உத்தமமான மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை மிஞ்சலாம் என்றும் அது வாசகர்களை இரண்டு கலாச்சாரங்களுக்குள்ளும் சமமாக அழைத்துச்செல்லும் தன்மையுடையதாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

இந்த நூல் கொடுத்த அனுபவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் பெரும் தயக்கமிருக்கிறது.ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் முன்னே போகும் கவி பின்னே செல்வார் என்று சொல்வார்கள்.இங்கே வார்த்தைகளே தெரிகின்றன. இந்த நூலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிதைகளைப் படித்துவிட்டு பிரபல கவி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கவிதைப் பேராசிரியர் அரவிந் கிருஷ்ண மெஹ்ரோத்ரா கூறியதை நான் என்னுடைய மொழியில் சொல்கிறேன். ‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள்.அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’பானையும் தப்பி-விடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.

குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு.‘காட்டிலே வேட்டுவன் கிழங்கு கிண்டியபோது ரத்தினக் கல் அகப்பட்டது’ என்று வரும். அதை உவமையாகச் சொல்லலாம்.அதுவும் போதாது.இந்த நூலைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும்.ஏ.டி.எம். மெஷினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு.

நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

David Damrosch சொல்வது இருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலத்தை தாண்டலாம் அல்லது விலகலாம் என்பது ஏற்புடையதன்று.
But tonight the moon is full again,
என்பது "But tonight again the full moon

என்று இருக்கலாம்தானே?